குனி மனிதரைக் கூன் நிமிர்த்தியவர்!

* கூடாது கூடாது கூடாது கூடாதென்று பாடாய்ப் படுத்திப் பாழ்படுத்தினர்! சமூகத்தை கேடுகள் கிழித்தெறியக் கிளர்ந்தது ஒரு சிங்கம்! * கூடாது கூடாதென்று கூடாரை வென்ற பெருஞ்சித்தர் நம் பெரியார்! * காலணியக் கூடாது - மேலணியக் கூடாது - நூலணியக் கூடாது - கையவிழக் கூடாது - மெய் நிமிரக் கூடாது - நீர் அருந்தக் கூடாது - நேர் வருதல் கூடாது - நூல் படிக்கக் கூடாது - மேலுயரக் கூடாது - கிட்ட வரக் கூடாது - தொட்டுவிடக் கூடாது - பட்டுவிடக் கூடாது - வேலை பெறக் கூடாது - கோவில் வரக் கூடாது - துண்டு தோளேறக் கூடாது - பெண்டிர் முன்னேறக் கூடாது - விதவையர் பூச்சூடக் கூடாது - பொட்டு வைக்கக் கூடாது - மறுமணங்கள் கூடாது - புதுவாழ்வு கூடாது என கூடாதுகளால் வாழ்வு கூடாதிருந்தது... * கனியை விலக்கிற்று ஒரு வேதம் - மனிதரையே விலக்கிற்று இம்மண் பேதம் - வைக்கத்தில் பெரியார் வைத்தார் பாதம் - மிதிபட்டது அம்மண் மட்டுமன்று - அம்மண்ணின் அடிமைத்தனமும்! * வந்ததைக் கண்டனர் - வென்றதைக் கேட்டனர் - இதிகாச ராமசாமி பாதம் பட்டு ஓர் அகலிகை மட்டுமே உய்ந்தாள்! புதுசகாப்த ராமசாமி பாதம் பட்டு உய்ந்தனர் பல்லாயிரத்தோர்! * பரியை நரியாக்கி நரியைப் பரியாக்கி கல்லைக் கனியாக்கி மண்ணைப் பொன்னாக்கி எலும்பைப் பெண்ணாக்கி செத்தாரை எழுப்பி ஆடுவன அல்ல சித்து! * மனிதரை மனிதராக்குதலே மாபெரும் சித்து! * குனிமனிதர் கூன் நிமிர்த்தி குருட்டு மனிதர் கண்திறந்து செவிட்டு மனிதரைச் செவிமடுக்கச் செய்து அடங்கி முடங்கியோரை நடைபயிலச் செய்து சீர்கெடச் செத்தாரை எழுப்பிச் சீர்வாழ்வு தந்த சித்தர் பெரியார்! * சேராது தடுக்கச் செய் சூட்சிகளைச் சோராது முறியடித்த சூரர் அவர்! * ஆகாதன ஆக்கி போகாதன போக்கிக் கூடாதன கூடச் செய்து கூடாதெனத் தடுத்த கூடாரை வென்ற வேந்தர் பெரியார்! ** - அனுப்பியவர்: எம்.கே. ஜமால் முஹம்மது.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!