தமிழக ஊடகங்களை அடிமையாக்க பிஜேபி முயற்சி! - ஆம் ஆத்மீ வசீகரன்
சென்னை: பத்திரிகை ஜனநாயகம் காத்திட, பத்திரிகையாளர்கள் - பத்திரிகையாளர் சங்கங்கள் ஒன்று பட வேண்டும் என்று
ஆம்ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை தாக்கிப் பேசுவதையும், அவமானப்படுத்துவதையும் தொடர் வேலையாக செய்து கொண்டிருக்கிறார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தியாளரை மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.
அவரை தனியாக தன் அறைக்கு அழைத்து மிரட்டும் காட்சிகள் எல்லாம் நாம் தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் பார்த்தோம்.
அண்ணாமலை ஏற்கனவே பத்திரிகையாளர்களை ஏலம் விட்டார், ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் தரக்குறைவாக பேசினார்.
யூ டியூப் வலைதள பத்திரிகையாளர்களை நீங்கள் பத்திரியாளர்கள் இல்லை என்பது போல் சொல்கிறார்.
பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார். இதுவரை தமிழக வரலாற்றில் தலைவர்கள் யாரும் இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டதில்லை.
தமிழக அரசு குறித்த சில ஊழல்களுக்கு ஆதாரம் தன்னிடம் உள்ளது. அதை நீ வெளியிடுவாயா என்று புதிய தலைமுறை செய்தியாளரை பார்த்துக் கேட்கிறார். உண்மையில் ஆதாரங்கள் இவரிடம் இருந்தால் வெளியிட வேண்டியது தானே?
இதிலிருந்து அவரிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் சொல்லி பிதற்றி வருகிறார் என்பது தெளிவாகிறது.
ரபேல் வாட்சுக்கு பில் தான் கேட்கிறார்கள். ஆனால் அவர் இந்த வாட்சில் கேமரா உள்ளதா பாருங்கள் என்று சம்பந்தம் இல்லாமல் பத்திரிகையாளர்களிடம் கேட்கிறார். மொத்தத்தில் இவர் தான் ஒரு ஏமாற்றுக்காரர் என்பதை வெளிக்காட்டியுள்ளார்.
மீடியாக்களுக்கு அரசு விளம்பரங்கள் மற்றும் பணம் கொடுப்பதாலேயே தமிழக தொலைக்காட்சிகளிருந்து வந்து இவரை செய்தியாளர்கள் கேள்விகள் கேட்பதாக சொல்லுகிறார்.
இந்தியாவிலேயே கோடிக்கணக்கில் ஊடகங்களுக்கு பணம் கொடுக்கும் கட்சி பாரதிய ஜனதா கட்சி தான், வட மாநிலங்கள் முழுவதும் மீடியாக்களை அடிமைப்படுத்தி விட்டார்கள். பல மீடியாக்களை அம்பானி, அதானி சொந்தமாக வாங்கியும் விட்டார்கள்.
தமிழ்நாட்டில் தான் ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் ஓரளவு மனசாட்சியோடு பணியாற்றி வருகிறார்கள்.
வட மாநிலங்கள் போல் பிஜேபி ஆளும் அரசுகள் போல் தமிழகத்திலும் பத்திரிகையாளர்களையும் பத்திரிக்கை - ஊடக- தொலைக்காட்சி நிறுவனங்களையும் அடிமைப்படுத்தும் முயற்சியில் தற்பொழுது பாஜக இறங்கிவிட்டது என்பதையே அண்ணாமலையின் செயல்பாடுகள் காட்டுகிறது.
பத்திரிகை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், கேமராமேன்கள் இவர்கள் இல்லாமல் எந்த ஊடக நிறுவனமும் இயங்க முடியாது.
பத்திரிகை ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால்,
பத்திரிகையாளர்கள் நலம் காக்க பத்திரிகை- ஊடக சங்கங்கள் அனைத்தும் கூட்டமைப்பாக இயங்குவது தற்பொழுது மிக அவசியமாகும்.
பத்திரிகை ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்த சவாலான நெருக்கடியை உணர்ந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோளை தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பாக - நானும் அடிப்படையில் பத்திரிகையாளன் என்ற முறையில் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஆம் ஆத்மீ
தமிழக தலைவர் வசீகரன்
கூறியுள்ளார்.

Comments
Post a Comment