கவிதை : அகிம்சைக்கு நேர்ந்த இம்சை!

* இவனது கைத்தடியின் முன்னால் வெள்ளைக்காரனின் பீரங்கிகளும் ஏவுகணைகளும் பயனற்றுப் போயின.... ஆனால் ஒரு கள்ளத்துப்பாக்கியின் முன்னால் தோற்றுப் போனான்.... * இனி பொய் பேசுவதில்லை என்று மெய் சொன்னவன் மேனியை ஒரு பொய் பொய்யாக்கிப் போட்டது... * கறந்த பாலாய் இருந்தவனை கள்ளிப்பால் கரித்துப் போட்டது... * ஓர் அரையாடை பக்கிரியை மூடி வந்த முழுஆடை போட்டுத் தள்ளியது... * இப்போதையக் கலகங்களுக்கெல்லாம் அப்போதே விதை போடப்பட்டது... * ஒரு பச்சைத்துரோகம் கையில் பச்சைக்குத்தி பச்சைப் படுகொலையை பட்டப்பகலில் செய்தது... * இந்து மத சத்தியம் அப்போது முதலே அசத்தியம் பூசி இந்துத்துவம் ஆனது... * வெள்ளையர் பாதுகாத்த அஹிம்சையின் தர்மத்தைக் கொள்ளையர் கொன்று இம்சையாக்கினர்... * நன்முறை இந்தியா வன்முறையானது.. * காந்தியின் தேசம் காந்தியைக் கொன்று இரத்தக் கரை படிந்தது... * எத்தனையோ முறை எப்படி எப்படியோ கழுவியும் நீங்காமல் அந்தக்கரை சரித்திரத்தில் படிந்தது... * இனி... இந்த தேசம் சாந்தியின் தேசமாக விடிவு காலம் எப்போது? ** - அத்தாவுல்லா

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!