சோதனை என்ற பெயரில் சிறுபான்மையின மக்களுக்கு அச்சுறுத்தல்!
சென்னை: விபத்தில் சிக்கி மரணம் அடைந்த இரு முஸ்லிம்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்காமல் அவர்களின் மீது கடும் பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவையில் கார் வெடிப்பு (அக்.23 - 2022) சம்பவத்தில் ஜமேஷா முபீன் என்பவர் மரணம் அடைந்தார். ஆனால் அவர் அருகில் உள்ள வழிபாட்டுத் தலத்தை தகர்க்க திட்டம் போட்டதாக வழக்கு போடப்பட்டது. தொடக்கத்தில் அவர் மீது குற்ற வழக்கு எதுவும் இல்லை என்று தமிழ்நாடு காவல் துறையினர் தெரிவித்தனர். ஆனால் அந்த வழக்கு தேசிய புலனாய்வு முகாமைக்கு ( ஒன்றிய போலீஸ் ) மாற்றப்பட்டது. பின்னர் மங்களூரில் நடந்த ஆட்டோ விபத்தில் ஷாரிக் என்பவர் ( நவ.19 -2022 ) படுகாயம் அடைந்தார். இந்த சம்பவமும் குக்கர் குண்டு வெடிப்பு வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குகளுக்கும் தொடர்பு இருப்பதாக - சந்தேக அடிப்படையில் தே.பு.மு. போலீஸ் சென்னையில் 3 இடங்களிலும் கோவையில் 14
இடங்களிலும் திருச்சியில் ஒரு இடம், நீலகிரியில் 2 இடங்களிலும் நெல்லையில் 3 இடங்களிலும் திருவண்ணாமலையில் ஒரு இடத்திலும் காயல்பட்டினம், தென்காசியிலும் சோதனை நடைபெற்றது. மங்களூர் குக்கர் வெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் 8 இடங்களில் சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனைகளில் முஸ்லிம் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, கணினி, அரபி மொழி புத்தகம்,செல்பேசிகள், லேப் டாப் போன்ற 'பயங்கர ஆயுதங்கள்' பறிமுதல் செய்யப்பட்டன. சோதனை செய்யப்பட்டவர்களில் அன்றாடம் கூலி வேலை செய்யும் பனியன் நிறுவன ஊழியர், தேங்காய் கிடங்கு ஊழியர், ஆட்டோ ஒட்டுனர்கள் ஆகியோர் அடங்குவர்.
உலகில் எங்கோ இருக்கும் பயங்கவாத இயக்கத்திற்கும் இங்குள்ள ஏழை முஸ்லிம்களுக்கும் எப்படி தொடர்பு இருக்கும்? இது திட்டமிட்டு பிஜேபி ஒன்றிய அரசால் சிறுபான்மையினர் மீது இலக்கு வைக்கப்படும் மிரட்டல் போக்கு என்று தமிழக முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
( 16-02-2023 )

Comments
Post a Comment