கவிதை: மானுட சேவையும் மத துவேசமும்!

* ஒரு வெண்ணிற தேவதையின் ஆயுட்கால தவத்தை ஒரு சுடுகாட்டுக் காக்கைக் கொத்திப் போட்டிருக்கிறது... * அப்பழுக்கில்லாத அந்த தேவதையின் மானுடச் சேவையை மத துவேஷத்தால் மறுதலிக்கிறான் ஒரு மவுட்டீகன்... * மனிதத்துவம் மிகுந்த அந்த பரோபகாரத்தின் மீது மதச் சாயம் பூசுகிறான் இந்த ராட்சசன்... * புழுவேறித் துளைத்த குஷ்ட விரல்களின் கொப்புளங்களையும் தன் ஈர இதழ்களால் ஒத்தி எடுத்து உபகாரம் செய்த பரிகாரத்தை அபச்சாரம் என்கிறான் இதயம் அழுக்கானவன்... * அவரது மரிக்கொழுந்து மனதை ஈட்டி கொண்டு சிதைக்கிறான் ஈனன்... * அன்னையின் தன்னலமற்ற சேவைப் பாலினை விஷம் என்று அலறுகிறான்... * கங்கைப் பிணந்தின்னிக் கழுகு தன் கரும்மாந்திர வினைக்காய் பறந்து சென்ற ஒரு பச்சைப் புறாவின் மேல் எச்சம் கழிக்கிறது... * ஏசு பெருமான் தொட்டால் நோயாளிகளுக்கு சுகமாம்... எந்த விரல் கொண்டு தீண்டச் சுகமாகும் இவன் நோய்...? * 'கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும்' என்றார் ஏசு பெருமான்.... அன்னை தெரசா ... இந்திய மக்கள் - கேளாமலே கிடைத்த வரம் ஏழையர் கைகள் - தட்டாமலே திறந்த கதவு - ஆதரவற்றோர் தேடாமலே கிடைத்த செல்வம்....! ** - அத்தாவுல்லா ( அன்னை தெரசாவின் தன்னலமற்ற சேவையை மதப்பிரசாரம் என்று பாசிசவாதிகள் பழி சுமத்தியபோது எழுதிய கவிதை! )

Comments