தமிழ்நாடு முதல்வருக்கு முஸ்லிம் சமுதாயம் கோரிக்கை!
சென்னை: தமிழகத்தில் அப்பாவி முஸ்லிம்
சிறைவாசிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ். டி. பி. ஐ. பொதுச் செயலாளர் அ. ச. உமர் பாரூக் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
நீதியரசர் ஆதிநாதன் குழு இயங்கியதற்கான எந்த தடயமும் தென்படாத நிலையில்,
ஆணையத்தின் பரிந்துரை பெறப்பட்டதாக முஸ்லிம் லீக் மாநாட்டில் முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
அந்தப் பரிந்துரையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை முதலில் வெளியிட வேண்டும்.
மேலும் இந்த முஸ்லிம் சிறைவசிகள் உள்ளிட்ட அப்பாவி சிறைவாசிகள் விடுதலை குறித்த பரிந்துரையை ( முதல்வர் ) உங்களால் உங்களுக்கான அதிகாரத்தில் நடைமுறைப் படுத்துங்கள்.
அல்லது முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய இயலாது என வெளிப்படையாக அறிவியுங்கள்.
அதை விட்டு விட்டு இதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும் என்ற அறிவிப்பு முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநருக்கு அனுப்பப்படும் எந்த கோப்பும் கிடப்பில் போடப்படுவதை நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டு இதையும் அவரிடமே அனுப்பப்போகிறேன் என்பது வினோதமாகவே உள்ளது.
எனவே வயது முதிர்ச்சியாலும், நோய்களாலும், வாடிக்கொண்டிருக்கும் அந்த நாதியற்ற சிறைவாசிகளின் உயிரோடு விளையாடாமல் விடுதலை செய்ய வேண்டும்.
கருணை என்பது ஆளுநர் மாளிகையில் இருந்து பெற முடியாது. அதை உங்கள் உள்ளத்திலிந்துதான் பெறமுடியும் என முஸ்லிம் சமூகம் இன்னமும் நம்புகிறது. அதை வீணாக்கி
விடாதீர்கள்.
இவ்வாறு
அ.ச.உமர் பாரூக் கூறியுள்ளார்.

Comments
Post a Comment